அனுமதி இல்லையென்றால் திமுகவினர் மீதும் வழக்கு! முதலமைச்சர் அதிரடி!!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்று கொள்ளப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு உறுப்பினர் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.பா.ம.க. எம்.எல்.ஏ. ஜி.கே.மணி போராட்டங்களுக்கு அனுமதி தரப்படுவதில்லை என்று கூறினார்
அதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு இடங்களில் அனுமதியோடு போராட்டங்கள் நடைபெறுகின்றன. போராட்டம் நடத்த உரிய முன் அனுமதி பெற வேண்டும். போராட்டம் செய்வதற்கென சில பகுதிகள் உள்ளன. திடீரென்று அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறும்போது வழக்கு போடப்படுகிறது” என்று தெரிவித்தார்.
நேற்று சென்னை சைதாப்பேட்டையில் கனிமொழி எம்.பி தலைமையில் நடந்த திமுகவினரின் ஆர்ப்பாட்டத்தின் போது அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக 3 ஆயிரம் திமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.