அமித்ஷா காலில் தனியாக விழுந்தாரா என்று தெரியவில்லை.. முதலமைச்சர் ஸ்டாலின் அட்டாக்!!
மதுரையில் 7வது தடவையாக நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒன்றிய அமைச்சர் அமித்ஷா காலில் தனியாக விழுந்தாரா என்று தெரியவில்லை என்று பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
”எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பழனிசாமி என்ன நினைத்தார்? நம்முடைய கூட்டணி பிரிய வேண்டும் என்று நினைத்தார். அதுக்காக, என்னென்ன கதைகளையோ உருவாக்கினார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.வுடன் பிரிந்த மாதிரி நடித்தால், நம்முடைய கூட்டணி உடையும் என்று நினைத்தார்கள்! ஆனால், அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை.
அதனால்தான், இப்போது டெல்லிக்குச் சென்று, பல கார்களில் மாறிமாறி, அமித்ஷாவை சந்தித்து, மீண்டும் பா.ஜ.க.விடம் சரணடைந்துவிட்டார். அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை அமித்ஷா அறிவித்தபோது ஒரு வார்த்தைகூட பேசாமல், பவ்யமாக பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். என்ன ஒரு அடக்கம்? சசிகலா இவரை முதலமைச்சராக அறிவித்தபோது, எப்படி எல்லாம் ஆக்சன் செய்தாரோ அதே மாதிரி நடிப்பு! என்ன... காலில் மட்டும்தான் விழவில்லை! அது தனியாக செய்தார்களா என்று நமக்கு தெரியவில்லை!
நாம் கேட்பது... ஒரு மாநிலத்தில், ஒரு கூட்டணிக்கு யார் தலைமை வகிக்கிறார்களோ, அவர்கள்தான் கூட்டணியை அறிவிப்பார்கள்! ஆனால், இங்கு அமித்ஷா அறிவிக்கிறார். இதிலிருந்தே இவர்கள் லட்சணத்தை நாம் புரிந்து கொள்ளலாம்! ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.வின் கண்ட்ரோலுக்கு சென்றிருக்கிறது அ.தி.மு.க! அடுத்து, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பா.ஜ.க.வின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்லத்தான் பழனிசாமி துடிக்கிறார்.
அதனால்தான் அமித்ஷா இங்கு அடிக்கடி வருகிறார்! நான் ஏற்கனவே சொன்னதுதான், மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன், எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. டெல்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே ‘out of control’-தான். இதை மக்களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.
பா.ஜ.க. கூட்டணி ஆட்சி வந்தால், தமிழ்நாட்டை என்ன செய்வார்கள் என்று சொல்ல வேண்டும். மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். சாதிக்கலவரங்களை தூண்டுவார்கள். மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய பிள்ளைகளை படிக்கவிட மாட்டார்கள். பிற்போக்குத்தனங்களில் நம்மை மூழ்கடிப்பார்கள். தொழில் வளர்ச்சி இருக்காது!
இந்தி மொழித் திணிப்பு - பண்பாட்டுத் திணிப்பு செய்து, தமிழ்நாட்டின் தனித்துவத்தையே அழித்திவிடுவார்கள் என்று மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, புதிதாக சிலர் “நாங்கள்தான் மாற்று” என்று இளைஞர்களை ஏமாற்ற வருகிறார்கள். அவர்களுக்கும் பதிலடி தர வேண்டும்” என்று கூறியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
