இரும்பு சுத்தியால் மனைவியை தாக்கிய கொடூர கணவன்.. குடும்ப தகராற்றில் ஏற்பட்ட விபரீதம்!
![cheyyar](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/fb4204f92bf433e13657c0c59f2ec194.jpg)
செய்யாறு அருகே குடும்பத் தகராறு காரணமாகப் பிரிந்து சென்ற, மனைவியைச் கணவன் சுத்தியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள மாமண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (35). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரேவதி (27) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு திவேஷ் என்ற மகனும், தாரிகா என்ற மகளும் உள்ளனர். ரேவதி மாங்கால் கூட்ரோட்டு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், பணிபுரிந்து வந்தார்.
கடந்த மாதம் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் ரேவதி வேலைக்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது, ரேவதிக்குப் பின்புறமாக வந்த சதீஷ், ரேவதியைக் காலால் எட்டி உதைத்து, கையில் மறைத்து வைத்திருந்த இரும்பு சுத்தியலால் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரேவதி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் ரேவதியை மீட்டு, மாமண்டூர் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ரேவதியின் பாட்டி சீத்தா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷை தேடி வருகின்றனர். கட்டிய மனைவியை கணவன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.