கிணற்றில் குதித்த புதுப்பெண்னை காப்பாற்ற முயன்ற கணவரும் பரிதாப பலி.. குடும்ப தகராறில் விபரீதம்!
![Salem](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/66852e7aa02c575a8f81cc8441558f93.webp)
வாழப்பாடி அருகே குடும்ப தகராறில், கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள துக்கியாம்பாளையம் ஊராட்சி மாரியம்மன் புதூர் பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன் (31). கட்டிட தொழிலாளியான இவருக்கும் சந்திரபிள்ளைவலசு ஊராட்சி சமத்துவபுரம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவரது மகள் அபிராமிக்கும் (19) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் அருள்முருகனுக்கும், அபிராமிக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. விரக்தியடைந்த அபிராமி வீட்டின் அருகே உள்ள 200 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அருள்முருகன், அவரை காப்பாற்ற குதித்தார். கிணற்றில் தற்போது 10 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருந்தது.
தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து வாழப்பாடி போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் 2 பேரின் உடலையும் மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக உடல்களை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 மாதங்களே ஆவதால், சேலம் கோட்டாட்சியர் அம்பாயிரமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார். குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை செய்த நிலையில், காப்பாற்ற முயன்ற கணவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.