மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதித்த வீடுகள்.. சீரமைக்க ரூ 45.84 கோடி ஒதுக்கீடு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 
Chennai

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைப்பதற்காக தமிழ்நாடு அரசு ரூ.45.84 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் பெய்த மழை வெள்ளத்தால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டது. அதுபோல அதிதீவிர கனமழையால் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உணவுக்கும், தங்குவதற்கும் பாதுகாப்பான இடம் இன்றி பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.

Rain

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைப்பதற்காக தமிழ்நாடு அரசு ரூ.45.84 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2023, டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டங்களில் வசித்து வந்த பெரும்பாலான ஏழை மக்களின் வீடுகள் பெரிதும் சேதமுற்றன.

அவ்வாறு மழைவெள்ளத்தினால் பகுதியாக சேதமடைந்த வீடுகளை பழுது பார்ப்பதற்கு ரூ.2.00 இலட்சம் வரையும் முழுமையாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாக கட்டுவதற்கு ரூ.4.00 இலட்சம் வரையும் நிவாரணமாக வழங்கப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Rain

அதன்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளிலுள்ள மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பகுதியாக மற்றும் முழுமையாக சேதமடைந்த 955 வீடுகளுக்கு பழுது நீக்கம் செய்யவும் மற்றும் புதிய கட்டுமானத்திற்கும் ரூபாய் 24.22 கோடியும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள 577 சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.21.62 கோடியும் ஆகமொத்தம் ரூ.45.84 கோடி முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

From around the web