இளம்பெண்ணுக்கு சூடு... திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு!

 
Chennai

வீட்டு வேலைக்கு சென்ற பெண் கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில், பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் அவரது மருமகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைக்காக இளம்பெண் ஒருவர் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார். பணியில் சேர்ந்த இரண்டு நாட்களில், வேலை செட் ஆகவில்லை, என்னால் இவ்வளவு வேலை செய்ய முடியாது என்று கூறி அங்கிருந்து வெளியேற முயன்று இருக்கிறார். ஆனால், கருணாநிதியின் மகனும், மருமகளும் இப்பெண்ணை வெளியேற விடாமல் தொடர்ச்சியாக வேலை வாங்கியதாக தெரிகிறது.

இது குறித்து விரிவாக வீடியோவில் இளம்பெண் விவரித்திருந்திருக்கிறார். இந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில் அரசியல் கட்சிகளும், சமூக செயற்பாட்டு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து வருகின்றார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கி இவரது வீட்டில் ஒரு பட்டியலினச் சிறுமியை வேலைக்கு வைத்துள்ளனர்.

Chennai

அச்சிறுமி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சார்ந்தவர். சிறுமி 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வானவர். எனவே சிறுமியின் பெற்றோர்களிடம் மேற்படிப்பு படிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்துள்ளனர். ஆனால் ஆன்டோவின் துணைவியார் மெர்லின் ஒரு மன நோயாளியைப் போல் தொடர்ந்து அந்த பட்டியலின சிறுமியை துன்புறுத்தி இருக்கிறார்.

நிர்வாணப் படுத்துவது, உடலில் சூடு போடுவது, கரண்டியால் மார்பில் அடிப்பது, தீக்காயங்கள் ஏற்படுத்துவது, ரத்தக்காயங்கள் ஏற்படுத்துவது, சாதி ரீதியாக இழிவாகப் பேசுவது, பொருளாதார ரீதியாக எதுவும் இல்லாதவள்தானே என்று இழிவு படுத்துவது என்கிற முறையில் மிகக் கொடூரமாக சித்திரவதைகளை செய்துள்ளார். ஆண்டோவும் ஓரிருமுறை தாக்கியுள்ளார்.

காலை முதல் இரவு வரை மிகக் கடுமையாக வேலைகள் கொடுப்பது, சமைப்பது முதல் துணி துவைப்பது வரை வீட்டில் இருக்கிற அனைத்து வேலைகளையும் அந்த சிறுமியின் மீது இரக்கம் இல்லாமல் திணித்து இருக்கிறார்கள்.

Case

இந்த முறையில் 8 மாத காலங்கள் எண்ணிப் பார்க்க முடியாத சித்திரவதையை அந்தச் சிறுமி அனுபவித்து இருக்கிறார். இந்த கொடூர குற்றவாளி ஆன்டோ மதிவாணன் அவரது துணைவியார் மெர்லின் ஆகிய இருவரையும் எஸ்சி எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி முடித்து, குற்றவாளிகளுடைய தண்டனையை உறுதி செய்திட வேண்டும்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உளவியல் ரீதியான கலந்தாய்வுகளை ஏற்பாடு செய்திட வேண்டும். அவருடைய உயர்கல்விக்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும். எஸ்சிஎஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் அனைத்து நிவாரணங்களையும் அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

அதேபோல நீலம் பண்பாட்டு மையம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தரப்பிலிருந்தும் இந்த சம்பவத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்திருந்தன. இதனை தொடர்ந்து, பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

From around the web