பள்ளிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

 
Leave

கனமழை வெள்ளம் காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17-ம் தேதி அதி கனமழை பெய்தது. தொடர்ந்து பல மணிநேரமாக இடைவிடாது பெய்த பேய் மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகள், வீடுகள், கோவில்கள், பேருந்து நிலையங்கள் என எங்கு பார்த்தாலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் மழை நின்ற நிலையில் தாழ்வான இடங்களில் தேங்கிய வெள்ளம் படிப்படியாக வடிந்து வருகிறது. வீடுகள், கடைகளுக்குள் புகுந்த மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த பொருட்களை மக்கள் அகற்றி வருகிறார்கள். இதனால் பல கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தேங்கிய நீர் வடிந்ததால் அங்கிருந்து மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கி உள்ளது. பஸ் போக்குவரத்தும் ஓரளவு சீரான நிலையில், அங்கு இயல்பு நிலை படிப்படியாக திரும்பிவருகிறது.

ஆனால் தூத்துக்குடி மாவட்டம் இன்னமும் வெள்ளத்தில்தான் மிதக்கிறது. முத்துநகர் என்று வர்ணிக்கப்படும் தூத்துக்குடி தற்போது வெள்ள நகரமாக மாறியுள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் தத்தளிக்கிறது. தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் உடைப்பு ஏற்பட்டு அந்த தண்ணீரும் தூத்துக்குடி நகருக்குள் புகுந்தது. இதனால் நகரமே நீரால் சூழப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 18-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  நெல்லையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களாக செயல்படும் கல்லூரிகளை தவிர ஏனைய கல்லூரிகள்  செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியை பொறுத்தவரை பள்ளி, கல்லூரிகளுக்கு முழுமையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

From around the web