அதீத கனமழை எச்சரிக்கை.. பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.. கல்வித்துறை உத்தரவு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதி கனமழை எச்சரிக்கை காரணமாக, நாளை (நவம்பர் 4) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக தென் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழ்நாடு கடலோர மாவட்டங்களிலும் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. மேலும், இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல தெற்கு வங்கக் கடல் பகுதியலும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வரும் 6-ம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நாளை தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் உரிய முன்னேற்பாடுகளை செய்வதற்காக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. கனமழை எச்சரிக்கை எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை விடப்படுகிறது என்று கன்னியாகுமரி மாவட்ட கல்வி அதிகாரி அறிவித்துள்ளார்.