இப்போது தான் ஞானம் வந்ததா? அமலாக்கத்துறைக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் கேள்வி!!

2007ம் ஆண்டு முதல் 2021 வரை முறைகேடு நடந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது தான் ஞானம் வந்தது போல விசாரணை நடத்துவது ஏன் என்று அமலாக்கத்துறையை நோக்கி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்க துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என்று அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
டாஸ்மாக் சார்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன்,அமலாக்கத் துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது என்று வாதிட்டனர்.
கடந்த 2007ம் ஆண்டு முதல் 2021 வரை முறைகேடு நடந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது தான் ஞானம் வந்தது போல விசாரணை நடத்துவது ஏன்?. என்று கேட்டனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அனைத்து துறைகளிலும் ஊழலை ஒழிப்பது தானே அரசின் நோக்கம் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல், அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனை மாநில அரசு கவனித்துக்கொள்ளும் அமலாக்கத்துறை அல்ல என்றார்
டாஸ்மாக் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் வாதங்கள் முடிந்து விட்டதால், வரும் 22ம் தேதி எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனிடையே, இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு பாஜக பிரமுகர் ஏ.மோகன்தாஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்