சென்னை மக்களுக்கு வந்த ஹேப்பி நியூஸ்.. வெறும் 5 ரூபாயில் நாளை மெட்ரோவில் பயணிக்கலாம்!

 
Metro

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் ரூ.5 என்ற கட்டணத்தில் மீண்டும் நாளை பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்ட்ரலில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூர் வரை ஒரு வழித்தடமும், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக இன்னொரு வழித்தடம் செயல்பட்டு வருகின்றன. மெட்ரோவின் தேவையும் சென்னைவாசிகளுக்கு அத்தியாவசியமாகி வருகிறது. எனவே, மெட்ரோ நிறுவனமும், பயணிகளின் வசதிகளை கருதி பல்வேறு அதிரடிகளை வெளியிட்டபடியே உள்ளது.

குறிப்பாக, மெட்ரோ ரயிலில் 100 ரூபாய்க்கு சிறப்பு பயண அட்டை மூலம் ஒரு நாள் முழுவதும் பயணிக்கலாம் என்ற அறிவிப்பு உட்பட போன்பே மூலமாகவே மெட்ரோ ரயில் டிக்கெட்களையும் பெற்று கொள்ளும்படியான வசதி வரை தற்போது கொண்டுவரப்பட்டது. அதேபோல, வெறும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து, அதை அமல்படுத்தியும் காட்டியிருந்தது.

Metro train

இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் ரூ.5 என்ற கட்டணத்தில் மீண்டும் நாளை பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு கடந்த 03.12.2023 அன்று க்யூஆர் பயணச்சீட்டுகளை (Static QR; Mobile QR; Paytm; Whatsapp and PhonePe) பயன்படுத்தி பயணித்த பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெறும் ரூ.5 என்ற பிரத்யேகக் கட்டணத்தை வழங்கியது.

ஆனால், மிக்ஜம் புயல் மற்றும் கனமழை காரணமாக (03.12.2023) அன்று மெட்ரோ பயணிகள் அதிகளவில் பயணிக்க இயலாத காரணத்தினால் மீண்டும் வருகின்ற 17.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மெட்ரோ பயணிகள் இச்சலுகையை பயன்படுத்தி வெறும் ரூ.5 என்ற பிரத்யேகக்கட்டணத்தில் பயணிக்கலாம்.


இந்த பிரத்யேகக் கட்டணம் டிசம்பர் 17, 2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டுமே செல்லுபடியாகும். மேலும் இது இ-க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கு (Static QR; Mobile QR; Paytm; Whatsapp and PhonePe) மட்டுமே பொருந்தும். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆர் ஆகிய பயணச்சீட்டு முறைக்கு இச்சலுகை பொருந்தாது.

பயணிகளின் ஒட்டு மொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச்சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த பிரத்யேகக் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web