ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. பருப்பு, பாமாயிலை ஜூலையில் பெறாதவர்கள் ஆகஸ்ட்டில் பெறலாம்

 
Ration-Shop

துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஜூலை மாதத்தில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை தற்போது சுமார் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் இருக்கின்றன. ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மானிய விலையிலும், விலையில்லாமலும் அரிசி சர்க்கரை, பருப்புகள், பாமாயில் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் அட்டையை பொருத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறுபடும். ரேஷன் பொருட்களில் மாதம்தோறும் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஜூலை மாதத்தில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Ration

இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.

ஜூன் 2024-ம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள், ஜூன் 2024-ம் மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஜூலை 2024-ம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என சட்டமன்றத்தில் மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஜூன் 2024-ம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜூலை 2024-ம் மாதத்தில் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது. 

Ration

இருப்பினும், ஜூலை 2024-ம் மாதத்தில் சிறப்பு பொது விநியோகத்திட்டப் பொருட்கள் முழுமையாக நகர்வு செய்யப்படாத காரணத்தினால் குடும்ப அட்டைதாரர்களால் ஜூலை 2024-ம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முழுமையாக பெற இயலவில்லை.

ஆதலால், குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு ஜூலை 2024-ம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான ஜூலை 2024-ம் மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஆகஸ்ட் 2024-ம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.

From around the web