குரூப்-2 தேர்வில் குளறுபடி... தேர்வெழுத கூடுதல் நேரம்... டிஎன்பிஎஸ்சி தேர்வில் மாற்றம்!!

 
TNPSC

தமிழ்நாட்டில் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு தொடங்குவதில் சில இடங்களில் கால்தாமதம் ஏற்பட்டது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு, முதன்மைத் தேர்வு இன்று தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் 186 தேர்வு மையங்களில் 57,641 தேர்வர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

TNPSC

இந்நிலையில் பல்வேறு இடங்களில் வினாத்தாளில் உள்ள பதிவு எண்கள் மாறி மாறி இருந்ததால், காலை 9.30 மணிக்கு தொடங்க இருந்த தமிழ் மொழி தகுதித் தாளுக்கான தேர்வு தாமதமானது. ஒரு சில மையங்களில் இந்த சிக்கல் சரிசெய்யப்பட்டுத் தேர்வு தொடங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற சில மையங்களில் மாறியிருக்கும் பதிவு எண்களைச் சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு மையத்திலும் எவ்வளவு நேரம் தாமதம் ஏற்படுகிறதோ தேர்வர்களுக்கு அவ்வளவு நேரம் கூடுதலாக வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தற்போது அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

TNPSC

அந்த விளக்கத்தின்படி, “ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 2 (தொகுதி-2 & 2ஏ)ன் முதன்மை எழுத்துத் தேர்வு இன்று (25.02.2023 முப & பிப) 20 மாவட்டத் தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. வருகைப் பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாட்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக காலை வினாத்தாட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

தற்போது அந்த நிலைமை சரிசெய்யப்பட்டு, தேர்வு அனைத்து இடங்களிலும் துவங்கப்பட்டுள்ளது. இந்த கால தாமதத்தை ஈடுசெய்யும் வகையில் மதிய தேர்வு 2.30 மணிக்குத் துவங்கி 5.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web