பீகாரில் இருந்து சேலம் வர மறுப்பு தெரிவித்த காதலி.. தற்கொலை செய்து கொண்ட காதலன்!

 
Bihar

பீகாரை சேர்ந்த காதலி வரமறுத்ததால் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பகவத்கர்த்தா மாவட்டம் பவுகர் அருகே உள்ள மைனா கிராமத்தை சேர்ந்தவர் விசர்ஜித் காமத் (19). இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த நண்பர்கள் 4 பேருடன் சேலம் வந்தார். பின்னர் அவர்கள் சேலம் மாநகர் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியில் உள்ள இந்தி ராணி என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கி டைல்ஸ் ஒட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். 

இதனிடையே நேற்று முன்தினம் இரவு 11 மணி வரை விசர்ஜித் காமத் தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். பின்னர் நண்பர்கள் தூங்குவதற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விசர்ஜி காமத் பீகாரில் உள்ள தனது காதலியிடம் செல்போன் மூலம் வீடியோ காலில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

Suicide

இந்த நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் அவரது நண்பர் அமனிஸ் குமார் கழிவறை செல்வற்காக அறையில் இருந்து வெளியே எழுந்து வந்தார். அப்போது வெளியே இருந்த சமையறையில் உள்ள விட்டத்தில் விசர்ஜித் காமத் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக்கண்டு சக நண்பர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் கதறி அழுதுள்ளனர். 

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அழகாபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விசர்ஜித் காமத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருடைய செல்போனை எடுத்து போலீசார் பார்த்த போது, அதில் விசர்ஜித் காமத் தனது காதலியின் புகைப்படங்களை வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் வாலிபர் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

Alagapuram PS

விசாரணையில், விசர்ஜித் காமத் தனது கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். மேலும் அவர் வேலைக்கு சென்றுவிட்டு வந்த பிறகு இரவு நேரத்தில் தினமும் தனது காதலியுடன் வீடியோ காலில் பேசிவிட்டு தான் தூங்குவதற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனிடையே காதலியை பார்த்து 4 மாதங்கள் ஆகியதால் அவரை சேலத்துக்கு வருமாறு கடந்த சில நாட்களாக அழைத்துள்ளார். ஆனால் அவர் வயது குறைவு என்பதாலும், பெற்றோரை விட்டு வருவதற்கு தயங்கியதாலும் காதலன் அழைத்ததற்கு தற்போது வர இயலாது என்று கூறியதாக கூறப்படுகிறது. காதலி வர மறுத்ததால் மன வேதனை அடைந்த விசர்ஜித் காமத் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பீகாரை சேர்ந்த 15 வயது காதலி சேலம் வர மறுத்தது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web