வீட்டில் பதுங்கி இருந்த ராட்சத முதலை.. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்
Updated: Feb 13, 2024, 02:12 IST
சிதம்பரம் அருகே வீட்டில் பதுங்கி இருந்த 8 அடி நீளமுள்ள முதலையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்ரஷீத். இவர், இன்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் பகுதியில் சுமார் 8 அடி நீளமும் 110 கிலோ எடையும் கொண்ட முதலை ஒன்று இருந்துள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் வனத்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் முதலையை பத்திரமாக அங்கிருந்து மீட்டு, வக்காரமரி ஏரியில் முதலையை பாதுகாப்பாக விட்டனர், வீட்டிற்குள் அதிகாலையில் முதலை இருந்த சம்பவம் நாஞ்சலூர் கிராம பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.