நண்பரின் மனைவியுடன் உல்லாசம்... காய்கறி வியாபாரி கட்டையால் அடித்து படுகொலை! ஓசூர் அருகே பயங்கரம்!

ஓசூர் அருகே காணாமல்போன காய்கறி வியாபாரி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்து உள்ள பேரண்டபள்ளி காட்டுபகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனைக் கண்ட வனத்துறையினர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அட்கோ போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் தனது அண்ணன் சிலம்பரசனை காணவில்லை என்று ஓசூர் நகர காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்தார். விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது சிலம்பரசன் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.
ஓசூர் ராஜூ தெருவில் பெற்றோருடன் வசித்து வந்த சிலம்பரசனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 29 வயதான சிலம்பரசன் ஓசூர் பேருந்து நிலையம் அருகே தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். மற்றொரு தள்ளுவண்டி வியாபாரியான குமாரும் சிலம்பரசனும் நண்பர்களாக பழகியுள்ளனர்.
குமாருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நண்பர் என்ற முறையில் குமார் சிலம்பரசனை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். இதில் குமாரின் மனைவி வைரமணிக்கும், சிலம்பரசனுக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த குமார் இருவரையும் கண்டித்து இருக்கிறார். குமாரின் கண்டிப்பை அலட்சியப்படுத்திய சிலம்பரன், தொடர்ந்து வைரமணியுடன் தொடர்பு வைத்துள்ளார். ஆத்திரம் அடைந்த குமார் சிலம்பரசனை கொலை செய்ய திட்டம் போட்டிருக்கிறார்.
கொலை திட்டத்தின்படி குமார், சம்பவத்தன்று பேச வேண்டும் என்று டாடா சுமோ காரில் சிலம்பரசனை அழைத்து சென்றுள்ளார். சிலம்பரசனை பேரண்டபள்ளி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று குமாரும், அவரது சித்தி மகன் சண்முகமும் சேர்ந்து கட்டையால் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. குமார், சண்முகம் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலைக்கு பயன்படுத்திய சுமோ காரையும் பறிமுதல் செய்தனர்.