மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை.. சாகும் வரை சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்!
![TV Malai](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/73674231867a1f1e46cc4455423cf887.webp)
ஆரணி அருகே பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தைக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (47). இவர் நாட்டு வைத்தியம் பார்த்து வந்தார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இவரது மனைவிக்கு குழந்தை பிறந்து பின்னர் கால்கள் செயலிழந்து நடக்க முடியாத நிலையில் இருந்து வருகிறார். இதனால் இவர்களது மகள் அருகே உள்ள தனது பாட்டி வீட்டில் பாட்டியின் பராமரிப்பில் இருந்து அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு 8-ம் வகுப்பு படித்து வந்த போது ஒருநாள் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது சிறுமியின் வயிறு சற்று பெரியதாக தெரிந்துள்ளது. இதனைக் கண்ட ஆசிரியை இது குறித்து சிறுமியிடம் பாட்டியிடம் தகவல் தெரிவித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன் பெயரில் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆரணி அனைத்து மகளிர் போலீசார் இது குறித்து சிறுமி மற்றும் அவரது பாட்டியிடம் விசாரணை நடத்தினார். கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறுமி வீட்டில் இருந்தபோது 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு நாள் சிறுமியின் தந்தை கன்னியப்பன் தனது மகள் என்றும் பாராமல் சிறுமையை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் அவர் இந்த சம்பவம் குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் அதேபோல் பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ம் தேதி பொக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தை கண்ணியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமி சேலத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த வழக்கு திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் கன்னியப்பன் சிறுமி கர்ப்பத்துக்கு தான் காரணம் இல்லை, எனக்கு ஆண்மை இல்லை எனக் கூறி வந்துள்ளார். இதனிடையே சிறுமிக்கு 9-வது மாதத்தில் குழந்தை பிறந்தது. குழந்தையின் டிஎன்ஏ பரிசோதனை செய்ததில் கன்னியப்பன் தான் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் என்பதை தெரியவந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி பார்த்தசாரதி விசாரித்தார் மகளையே சீரழித்த கொடூர தந்தை கன்னியப்பனுக்கு சாகும் வரை தண்டனையும் 20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக புவனேஸ்வரி ஆஜராகினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி பரிந்துரை செய்தார். கண்ணியப்பனை காவல்துறை அழைத்துச் சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.