பிரபல எழுத்தாளார் காலமானார்... அரசியல் தலைவர்கள் இரங்கல்!

சமூக செயற்பாட்டாளர் லிங்கன் நேற்று மாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56.
கன்னியாகுமரியை பூர்வீகமாகக் கொண்டவர் எழுத்தாளர் லிங்கன். இவர், இந்திய பொதுவுடமைக் கட்சியின் கலை இலக்கிய பெருமன்றத்தில் பணியாற்றி வந்தார். பொதுவுடமை சிப்பி சிங்காரவேலரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதை தனது வாழ்நாள் கடமையாக கொண்டிருந்தார்.
இவர், பொதுவாக சென்னையில் நடக்கும் அனைத்து போராட்டங்கள் ஜனநாயக கூட்டங்களில் கட்டாயம் கலந்து கொண்டிருப்பார். மீனவர்களின் பிரச்சனை பற்றியும் அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை பற்றியும் பல்வேறு சிறு நூல்களை லிங்கன் எழுதியுள்ளார்.
வழக்கறிஞராக இருந்த லிங்கன், பொதுவாக நீதிமன்றத்திற்கு செல்வதை தவிர்த்து போராட்டங்கள், மனித உரிமை செயல்பாடுகள், உண்மை கண்டறியும் குழுக்கள் என 25 ஆண்டு காலத்தை பொதுமக்களுக்காகவே செலவிட்டார். திருமணம் செய்து கொள்ளாத இவர், நேற்று மாராடைப்பால் காலமானார்.
இவரது உடல் நாளை மண்ணடியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இவரது மறைவிற்கு எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.