குடும்ப தகராறு.. மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற ராணுவ வீரர்.. திருவள்ளூரில் பயங்கரம்

 
Thiruvallur

திருவள்ளூர் அருகே குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த விஜயன் அவரது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் செல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் (38). ராணுவ வீரரான இவர் தனது அக்காள் மகள் மோகனாவை (28) திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதி (10), அனிருத் (10) என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். விஜயன் குடும்பமும், இவரது அண்ணன் பாலாமணி என்பவரது குடும்பமும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

Murder

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப தகராறில் பாலாமணி தனது குடும்பத்துடன் தனி குடித்தனம் சென்றார். இந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் விஜயனுக்கு தெரிய வந்தது. இதனால் விஜயனுக்கும் - மோகனாவுக்கும் தகராறு ஏற்பட்டது. விஜயன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த விஜயனுக்கும் அவரது மனைவி மோகனாவுக்கும், அண்ணனை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய விவகாரம் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியநிலையில் ஆத்திரம் அடைந்த விஜயன் கத்தியால் மனைவி மோகனா கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். பின்னர் விஜயன் போதையில் அங்கேயே படுத்து தூங்கிவிட்டார்.

RK-Pettai-PS

நேற்று காலை மோகனா கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆர்.கே. பேட்டை போலீசார் மோகனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மனைவியை கொலை செய்த ராணுவ வீரர் விஜயனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

From around the web