ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்

 
Erode

கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று (பிப். 10) மாலை வெளியாகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ம் தேதி காலமானார். அதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதற்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் கடந்த 7-ம் தேதி நிறைவடைந்தது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், அமமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 96 பேர், 121 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். நேற்று முன்தினம் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இதில், ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகனின் வேட்புமனு உள்ளிட்ட 38 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

Erode

ஈவிகேஎஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்), கே.எஸ்.தென்னரசு (அதிமுக), ஆனந்த் (தேமுதிக), மேனகா நவநீதன் (நாம் தமிழர்), சிவ பிரசாந்த் (அமமுக) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்டோரின் 83 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற இன்று (பிப். 10) மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால், இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என டிடிவி.தினகரன் அறிவித்துள்ள நிலையில், அமமுக வேட்பாளர் சிவ பிரசாந்த் இன்று வேட்பு மனுவை வாபஸ் பெறவுள்ளார். வேட்பாளர் இறுதிப்பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. வரும் 27-ம் தேதி வாக்குப்பதிவு, மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Erode

தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் வேட்பாளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. இதை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு, தங்களுக்கு பிடித்த 3 சின்னங்களை குறித்துக்கொண்டனர். இந்த சின்னங்களில் ஏதேனும் ஒன்று அவர்களுக்கு வழங்கப்படும். ஒருவருக்கு மேல் ஒரே சின்னத்தை கேட்டு இருந்தால் குலுக்கல் முறையில் சின்னம் வழங்கப்படுகிறது.

From around the web