ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை; 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அதிமுக சார்பில் தென்னரசுவும் களத்தில் உள்ளன. இதுதவிர தேமுதிக, நாம் தமிழர் கட்சிகளும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இடைத்தேர்தலில் பதிவான 397 தபால் வாக்குகள் பெட்டியின் சீல் அகற்றப்பட்டு திறக்கப்பட்டது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டதன் முடிவில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் முன்னிலை பெற்றது.
தபால் வாக்கு தொடங்கி முதல் சுற்று, இரண்டாம் சுற்று என அனைத்திலும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அடுத்த இடத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர் தென்னரசு உள்ளார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவும், நன்காவது இடத்தில் தேமுதிக வேட்பாளரும் உள்ளனர்.
2 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், தேநீர் இடைவேளைக்காக வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதுவரை 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.
இதனிடையே வாக்கு எண்ணும் மையத்திற்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாததால் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முடிவுகள் முறையாக தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.