ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. அதிமுக ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் செந்தில் முருகன்!!

ஈரோடு கிழக்கு தொகுதியின் அதிமுக ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் பிப்ரவரி 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவருக்கு மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ ஆகியன ஆதரவு தெரிவித்துள்ளன. அது போல் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் 29 வயதான சிவபிரசாந்த் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரை இன்று அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளாரக தென்னரசு போட்டியிடுவார் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதேவேளை, இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை அறிவித்தால் நாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் விட்டு தருவோம் இல்லையேல் வேட்பாளரை நிறுத்துவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். ஆனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுமா? களத்தில் இருந்து விலகுமா? அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவு தருமா? ஓ.பன்னீர் செல்வம் தரப்பிற்கு ஆதரவு தருமா? என்பதில் தொடர்ந்து குழப்பாமான சூழ்நிலையே நிலவி வருகிறது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிருகிறார். இடைத்தேர்தலில் எங்கள் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிருவார் என்று ஓ.பன்னீர் செல்வம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை அறிவித்தால் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுக்கொள்வோம் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.