ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. அதிமுக எடப்பாடி அணியின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு!!

 
Thennarasu

ஈரோடு கிழக்கு தொகுதியின் அதிமுக இபிஎஸ் அணியின் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் பிப்ரவரி 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

EPS

இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவருக்கு மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ ஆகியன ஆதரவு தெரிவித்துள்ளன. அது போல் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் 29 வயதான சிவபிரசாந்த் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் பாஜகவுடனான கூட்டணி யாருக்கு என இன்னும் முடிவாகாததால் வேட்பாளர் அறிவிப்பு காலதாமதம் ஆனது. இன்நிலையில் ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் போட்டியிட ஈபிஎஸ் தரப்பு அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு போட்டியிடுவார் என இன்று காலை அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட தென்னரசுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு.கே.எஸ்.தென்னரசு,அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஏற்றத்திற்கான மாற்றம் ஈரோடு கிழக்கிலிருந்து ஆரம்பம்...!” என்று பதிவிட்டுள்ளார்.

From around the web