அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் சனிக்கிழமை ஜனவரி 11ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.
”அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் (11.1.2025) சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது..
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள், ஆக்க பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது” என்று அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா அல்லது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போல் புறக்கணித்து விடுமா என்ற முடிவு இந்தக் கூட்டத்திற்கு பிறகு தெரியவரும் என கருதப்படுகிறது.