பள்ளிகளுக்கு முன்கூட்டியே இறுதித்தேர்வு.. கோடை விடுமுறை நீட்டிப்பு.. பள்ளிக் கல்வித்துறை முடிவு

 
Exam

1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான, ஆண்டு இறுதி தேர்வுகளை, ஏப்ரல் 13-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ப்ளஸ்-2 பொதுத்தேர்வு, பிப்ரவரி 15-ம் தேதி துவங்கியது. ஏப்ரல் 2-ம் தேதி முடிகிறது. 10ம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி துவங்கி, கடந்த 13-ம் தேதி நிறைவு பெற்றது. ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில், ப்ளஸ்-2 பொதுத்தேர்வு பிப்ரவரி 12-ம் தேதி துவங்கியது, ஏப்ரல் 2-ம் தேதி முடிகிறது. 10ம் வகுப்புக்கு, பிப்ரவரி 21-ம் தேதி தேர்வு துவங்கியது, வரும் 28-ம் தேதி முடிகிறது.

அதேபோல், தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், ப்ளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி துவங்கியது. வரும், 22-ம் தேதி தேர்வு முடிகிறது. ப்ளஸ்-1 பொதுதேர்வு மார்ச் 4-ம் தேதி துவங்கியது. வரும், 25-ம் தேதி முடிகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 26-ம் தேதி துவங்க உள்ளது; ஏப்., 8ல் முடிகிறது.

Exam

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்து. இதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக, 40 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.

இந்த ஓட்டுப்பதிவு பணிக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஓட்டுச்சாவடிகளாக செயல்பட உள்ளன. அதற்காக, ஓட்டுச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளையும், வரும் 15-ம் தேதி முதல் தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளது.

Exam

இதன் காரணமாக, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான, ஆண்டு இறுதி தேர்வுகளை, வரும் 13-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசித்து, வகுப்பு மற்றும் பாடவாரியாக தேர்வு கால அட்டவணையை இறுதி செய்ய உள்ளனர். அதன் விபரம், விரைவில் பள்ளிக்கல்வியால் வெளியிடப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 அன்று பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் இம்முறை ஜூன் 4-ம் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

From around the web