இந்தி படித்தால் தான் நிதியா? ஒன்றிய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!! 

 
Dharmendra Pradhan

மும்மொழிக் கொள்கையான தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தமிழ்நாட்டுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும். இல்லாவிட்டால் நிதி வழங்க சட்டத்தில் இடமில்லை என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இது தமிழ்நாட்டு கல்வியாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பேரறிஞர் அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு ஒன்றிய அமைச்சருக்கு பதிலடி தந்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் பேரறிஞர் அண்ணாவின் உரையின் ஆடியோவை இணைத்து “வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க,எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்? மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்?

அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்கிரமம் என்றல்லவா கேட்கிறோம். உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல, இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல. எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல. " இந்த மூலக்கருத்தை உணரா முன்னம் வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும். " -பேரறிஞர் அண்ணா” என்று பதிவிட்டுள்ளார்

From around the web