காட்டுப்பகுதியில் சடலமாகக் கிடந்த திமுக பெண் கவுன்சிலர்.. அரை நிர்வாண நிலையில் சடலம் மீட்பு!
![Erode](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/52c9a002adf79b1426221b687e3a2e19.jpg)
ஈரோடு அருகே திமுக பெண் கவுன்சிலர் வீட்டு வேலைக்குச் சென்ற நிலையில் காட்டுப்பகுதியில் அரைநிர்வாண கோலத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னசமுத்திரம் சோளக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரூபா (48). திமுக பிரதிநிதியான இவர், சோளக்காளிபாளையம் 7வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இவரது கணவர் தங்கராஜ். இந்த தம்பதிக்கு கோகுல் என்ற மகன், மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். ரூபா அங்குள்ள சுற்றுவட்ட பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கரூரில் இருக்கும் வீடுகளில் வீட்டு வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.
நேற்று வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர், மாலை சுமார் 5 மணி ஆகியும் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரின் மகன், தாயார் வேலைக்கு செல்லும் வீடுகளில் சென்று விசாரித்துள்ளார். ஆனால் ரூபா காலையில் இருந்து வேலைக்கு வரவில்லை என அவர்கள் கூறியுள்ளனர். ரூபாவின் செல்போனுக்கு தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.
இதனையடுத்து, ரூபாவின் மகன் கோகுல் கொடுமுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், கரூர் மாவட்டம் பாலமலையில் பாலமலை - புன்னசத்திரம் சாலையில் இருக்கும் குமாரசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தின் காட்டுப்பகுதியில் அரைநிர்வாணமாக ஒரு பெண்ணின் சடலம் இருந்துள்ளது.
இதனைக்கண்ட உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் சென்று பார்த்தபோது அது ரூபாவின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து ரூபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூபா எதற்காக கொலை செய்யப்பட்டார்?. அவரை இங்கு அழைத்து வந்தது யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.