சாப்பிட்டுவிட்டு பணம் தரவில்லை... கோவில் குளத்தில் மிதந்த இளைஞர் சடலம் - பின்னணியில் கையேந்தி பவன்..!

 
Sholavaram

சோழவரம் அருகே காணாமல் போன சேலம் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்து உள்ள தேவியாகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (25). இவர், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள நல்லூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 20-ம் தேதி சேலத்தில் உள்ள தமது தங்கையிடம் செல்போனில் பேசிவிட்டு பின்னர் அவருடைய போன் சுவிட்ச் ஆப் ஆனதாகவும், அதன் பின்னர் பிரவீன் குமாரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் அவரது தந்தை சக்திவேல்(47), சோழவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

Naresh

அதன் அடிப்படையில் பிரவீன் வேலை பார்த்துவந்த நல்லூர் பகுதியில் போலீசார் நடத்திய விசாரணையில், அங்குள்ள செல்லியம்மன் கோவில் குளத்தில் பிரவீன் குமாரின் உடல் மிதப்பது தெரியவந்துள்ளது. சடலத்தை மீட்டு பார்த்தபோது தலையில் நெற்றிப்பகுதியில் 2 வெட்டுக்கள் இருந்தது தெரியவந்ததால் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் பிரவீன் குமாரை கொலை செய்து குளத்தில் வீசியதாகவும், அதுகுறித்து  சோழவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நல்லூர் பகுதியில் உள்ள சிற்றுண்டி கடையில் கடந்த திங்களன்று இரவு தமது நண்பருடன் பிரவீன் குமார் உணவருந்த சென்றபோது கடையில் பணம் தராமல் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

Sholavaram PS

இது குறித்து அந்த சிற்றுண்டி உரிமையாளரான பெண் தமது மகனிடம் கூறியதையடுத்து சிற்றுண்டி கடை உரிமையாளரின் மகன் நரேஷ் என்பவர் பிரவீன்குமாரை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். இதில் பிரவீன்குமார் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிற்றுண்டி கடை உரிமையாளரின் மகன் நரேஷை சோழவரம் போலீசார் கைது செய்தனர். சிற்றுண்டி கடையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web