தொடர் கனமழை.. வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 9 வயது சிறுமி பலி.. திருவாரூரில் சோகம்!

நன்னிலம் அருகே கனமழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்தமிழ்நாடு, வட தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று காலை 10 மணி முதல் மாலை வரை மிதமான மழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வந்தது. இந்நிலையில் இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அதிலும் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் நேற்றிரவு 10 மணி வரை சுமார் 40 செ.மீ. மழையின் அளவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள அதம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் ஸ்ரீவாஞ்சியம் மின்சாரத்துறை அலுவலகத்தில் தற்காலிகமாக வேலை செய்து வருகிறார். இவருக்கு மோகன்தாஸ் (11) என்ற மகனும் மோனிஷா(9) என்ற மகளும் உள்ளனர். அச்சிதமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மோகன்தாஸ் 6-ம் வகுப்பும், மோனிஷா 4-ம் வகுப்பு படித்து வருவதாக தெரிகிறது.
நேற்று மோகன்தாஸ் மற்றும் மோனிஷா இரவு உணவு சாப்பிட்டு விட்டு உறங்கிக் கொண்டிருக்கும் போது, கனமழையின் காரணமாக திடீரென சுவர் இடிந்து இருவரின் மீதும் விழுந்துள்ளது. அதில் மோனிஷாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, உடனடியாக தந்தை ராஜசேகர் இருவரையும், இருசக்கர வாகனத்தில் நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.
இதனையடுத்து நன்னிலம் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக மோனிஷாவை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த நன்னிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமியின் உடலை வைக்கப்படுள்ளது. இந்நிலையில், மோகன்தாஸ் சிறு காயங்களுடன் நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.