விரைவில் சென்னையில் மூன்றாவது பாதையில் மெட்ரோ ரயில்! முதலமைச்சர் தகவல்!!

 
CM Stalin

சென்னையில் மூன்றாவது வழித்தடத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் கடந்த திமுக ஆட்சியில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயிலுக்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வேலைகள் நடந்து வந்தது. அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் மெட்ரோ திட்டத்தை முடக்கிவிட்டு மோனோ ரயில் திட்டம் அறிவிக்க முயன்றனர். பின்னர் மெட்ரோ திட்டத்தை முடித்து இரண்டு வழித்தடங்களில் போக்குவரத்து தொடங்கியது.

திமுக ஆட்சியில் மேலும் 3 வழித்தடங்களுக்கு திட்டங்கள் தீட்டப்பட்டிருந்த நிலையில், அடுத்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் இந்தத்திட்டங்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டன. மீண்டும் 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 3 புதிய வழித்தடங்களுக்கான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தத் தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மெட்ரோ பணிகள் காரணமாக சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிம் நிலையில், நேற்று இந்தப்பணிகளைப் பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்.

பின்னர் அது குறித்து எக்ஸ் தளதில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், ”தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராகவும் - நான் துணை முதலமைச்சராகவும் இருந்தபோது தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ இரயில் பணிகள், தற்போதைய நமது திராவிட மாடல் அரசில் விரைந்து முன்னேற்றம் கண்டு வருகின்றன. முந்தைய ஆட்சியின் தாமதங்களுக்குப் பிறகு, இரண்டாம் கட்டப் பணிகளை, இந்தியாவிலேயே முதன்மையாக மாநில அரசின் நிதியைக் கொண்டே தொடர்ந்து வந்தோம். அண்மையில், நமது கோரிக்கையை ஏற்று, ஒப்புதல் வழங்கப்பட்ட ஒன்றிய அரசின் பங்களிப்போடு இன்னும் விரைவாகச் செயல்படுத்தி வருகிறோம்.

2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பூந்தமல்லி–போரூர் இடையேயான மெட்ரோ இரயில் சேவை தொடங்கி வைக்கப்படும். மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்துக்குள் நிறைவேற்ற, சென்னை மெட்ரோ  நிர்வாகத்துக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். இப்பணிகள் முழுமையாக நிறைவுறும்போது, இந்தியாவிலேயே நகரப் பொதுப் போக்குவரத்து இணைப்பினில் சென்னை புதிய தர அளவுகோல்களை நிர்ணயிக்கும்! நடைபெற்று வரும் பணிகளை இன்று ஆய்வு செய்தபோது, நாம் தொடங்கிய திட்டம் இன்று செயலாக்கம் பெற்று, மேலும் விரிவடைந்து வருவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். இந்த நேரத்தில் கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ஒப்புதலையும் விரைந்து ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

விரைவில் பூந்தமல்லி - போரூர் இடையேயான மெட்ரோ ரயில் செயல்பாட்டுக்கு வரும் என்று முதலமைச்சர் பதிவின் மூலம் தெரிய வந்துள்ளது.

From around the web