அதிமுக முன்னாள் அமைச்சர் மீது கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

 
MR Vijayabaskar

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல், போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்தல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார்பதிவாளர் (பொறுப்பு) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மீதும், தன்னை மிரட்டியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MR Vijayabaskar

இந்த நிலையில் இந்த வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என கருதி முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 12-ம் தேதி முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, அவரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே நிலமோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, சிபிசிஐடி போலீசார் தலைமறைவாக உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

MR-VijayaBaskar

இந்நிலையில் 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன்படி கொலை மிரட்டல், போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்தல் உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அவரது பெயரை சேர்த்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web