கனிமொழி பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் 3 ஆயிரம் திமுகவினர் மீது வழக்கு!
சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்பப் பெற வலியுறுத்தியும், பாஜக - அதிமுக கள்ளக்கூட்டணியை கண்டித்தும் திமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் படி சென்னை சைதாப்பேட்டையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,எம்.பி.,க்கள் தயாநிதி மாறன், கனிமொழி என்.வி.என்.சோமு, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தென் சென்னை, வட சென்னை மற்றும் மத்திய சென்னை மாவட்ட திமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனுமதியின்றி ஈடுபட்டதற்காக 3 ஆயிரம் திமுகவினர் பேர்மீது சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல் உள்பட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.