சாலை விபத்தில் உயிரிழந்த தம்பி.. மீட்க சுவாசம் கொடுத்து அண்ணன் பாசப்போராட்டம்!

 
Gingee

செஞ்சி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த தம்பியை காப்பாற்ற அண்ணன் போராடிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த களையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு ராஜரத்தினம் மற்றும் ரங்கநாதன் என 2 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் ரங்கநாதன் சென்னையில் முடி திருத்தும் கடையில் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் களையூர் கிராமத்தில் இருந்து நாட்டார்மங்கலத்திற்கு செல்ல ரங்கநாதன் புதுச்சேரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றதாக தெரிகிறது.நாட்டாரமங்கலம் சென்றபோது ரங்கநாதன் சென்ற பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

Accident

இதில் தலையில் பலத்த காயமடைந்த ரங்கநாதன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கியுள்ளார். விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ரங்கநாதனை பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாக கூறி சென்றனர்.

இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அவரது குடும்பத்தினர், ரங்கநாதன் உடலை கண்டு கதறினர். ரங்கநாதனின் அண்ணன் ராஜரத்தினம், தனது தம்பியை காப்பாற்ற அவரே தனது மடியில் கடத்திக்கொண்டு தம்பியின் வாயோடு வாய் வைத்து சுவாசம் கொடுத்து எழுப்ப முயன்றார்.

Gingee PS

அப்போது அங்கிருந்தவர்கள் ரங்கநாதன் உயிரிழந்து விட்டதாக கூறியபோது அதனை நம்ப மறுத்த ராஜரத்தினம், தனது தம்பியின் மார்ப்பில் கையை வைத்து அழுத்தி தம்பியின் உயிரை மீட்க போராடியது காண்போரின் கண்களையும் மனதையும் கனக்க செய்தது. இதைக்கண்டு அவரது தாய் தந்தை தலையில் அடித்து கொண்டு அழுதது கண்கலங்க செய்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செஞ்சி போலீசார், ரங்கநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web