குப்பையில் வீசப்பட்ட ஆண்சிசு சடலம்... நெல்லையில் பரபரப்பு

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குப்பையில் ஆண்சிசு சடலம் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மேலப்பாளையம் ராஜாநகரில் தெருவோரம் கொட்டப்பட்டு இருந்த குப்பைகளுக்கு நடுவே ஒரு சிசுவின் உடலை கண்டு தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக அவர்கள் மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பகுதியை பார்வையிட்டனர். அப்போது அங்கு பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண்சிசு உயிரிழந்த நிலையில் கிடந்தது. இதனையடுத்து சிசுவின் உடலை போலீசார் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடா்ந்து அந்த குழந்தையின் தாய் யார்?, கள்ளக்காதல் விவகாரத்தில் பிறந்ததால் குழந்தையை கொன்று வீசி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.