பன்மைத்துவத்தை சிதைத்து பாஜக அரசியல் செய்கிறது!! தொல்.திருமாவளவன் கண்டனம்!!

இந்தியாவின் பன்மைத்துவத்தை சிதைத்து பாஜக அரசியல் செய்கிறது என்று கூறியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொல்.திருமாவளவன், ”மும்மொழிக் கொள்கை தொடர்பான பிரச்சனையில் பாஜக தமிழ்நாட்டில் தேவையற்ற ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை நடத்துவது, என்னவென்று விளக்கிச் சொல்லாமலே மாணவர்களிடம் பிஸ்கட், சாக்லெட் ஆகியவற்றைக் கொடுத்து கையெழுத்து வாங்குவது போன்ற நடவடிக்கைகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
வட இந்திய மாநிலங்களில் குறிப்பாக இந்தியை தாய்மொழியாகக் கொண்ட மக்களிடையே இருமொழிக் கொள்கையே நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பதே எதார்த்த நிலை.அங்கெல்லாம் மும்மொழிக் கொள்கை என்ற பேச்சே இல்லை.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்து கொண்டே பாஜகவை சேர்ந்தவர்கள் தமிழுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக செயல்படுவது வன்மையான கண்டனத்திற்கு உரியது. இந்தியாவின் பன்மைத்துவத்தை சிதைத்து பாஜக தான் அரசியல் செய்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) March 8, 2025