கோவையில் அண்ணாமலை தோல்வி.. சாலையில் அமர்ந்து மொட்டை அடித்துக்கொண்ட பாஜக நிர்வாகி!

 
Coimbatore

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தலில் தோல்வி அடைந்ததால் பாஜக நிர்வாகி ஒருவர் நடுரோட்டில் மொட்டை அடித்துக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது. மொத்தம் 950 வேட்பாளர்கள் களம் கண்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4-ம் தேதி எண்ணப்பட்டது. இதில், திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சிகளால் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

அந்த வகையில், கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணியும் என மொத்தம் 37 பேர் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,64,662 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Annamalai

அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை 4,47,101 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 2,35,313 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 82,273 வாக்குகளும் பெற்றனர். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அண்ணாமலையை 1 லட்சத்து 17 ஆயிரத்து 561 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். கோவையில் அண்ணாமலையின் தோல்வி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உடன்குடி யூனியன் பரமன்குறிச்சி அருகே உள்ள முந்திரிதோட்டம் ஜெயசங்கர் என்பவர் கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை முழுமையாக வெற்றி பெறுவார், வெற்றி பெறவில்லை ஆனால் நான் மொட்டையடிப்பேன் என்று மாற்று கட்சி நண்பர்களிடம் பந்தயம் கட்டியுள்ளார்.


இந்த நிலையில் தேர்தலில் அண்ணாமலை தோல்வி அடைந்ததையடுத்து மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பரமன்குறிச்சி பஜாரில் உள்ள சாலையில் ஜெயசங்கர் அமர்ந்து கொண்டு மொட்டை போட்டுக்கொண்டு பஜாரில் உள்ள ரவுண்டானாவை சுற்றி வந்து பந்தயத்தை நிறைவேற்றினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இவர் உடன்குடி ஒன்றிய பாஜகவின் நலதிட்ட பிரிவு பொதுச்செயலாளராக இருக்கிறார்.

From around the web