குப்பைத் தொட்டியில் சடலமாகக் கிடந்த ஆண் சிசு.. குளித்தலை அருகே பரபரப்பு!

 
Thogaimalai

குளித்தலை அருகே குப்பைத் தொட்டியில் பிறந்து சிலமணி நேரமேயான ஆண் சிசு சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காவல்காரன்பட்டி பகுதியில் ஆதிதிராவிடர் காலனி சமுதாயக்கூடம் அமைந்துள்ளது. இந்த சமுதாயக்கூடத்திற்கு அருகே உள்ள குப்பைத் தொட்டியில் பிறந்து சிலமணி நேரமேயான ஆண் சிசு சடலமாக கிடந்துள்ளது. இதனைக் கண்ட நாய்கள் கூட்டமாக நின்று சத்தமிட்டுள்ளன.

baby

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது தொட்டிக்குள் பிறந்து சிலமணி நேரமேயான ஆண் குழந்தை சடலமாக கிடந்தது. இந்த சம்பவம் குறித்து வடசேரி ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன், வடசேரி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடசேரி ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் இறந்த ஆண் சிசுவை பார்வையிட்டு தோகைமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்த கிடந்த ஆண் சிசுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Thogaimalai PS

இதைத்தொடர்ந்து குப்பைத் தொட்டியில் ஆண் சிசுவை வீசிச் சென்றது யார்? எதற்காக வீசிச் சென்றனர் என அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் தகவல் ஏதும் கிடைக்குமா என ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web