நீதிமன்ற வழக்குகள் - பொன்முடி செந்தில்பாலாஜி பதவிகளுக்கு ஆபத்தா?

சென்னையில் நடைபெற்ற பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி சைவம், வைணவம், பெண்கள் தொடர்பாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. இருப்பினும், அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அவர் மீது வழக்குப்பதிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால், செந்தில் பாலாஜியும் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற 5-வது அமைச்சரவை மாற்றத்தின்போது, மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.அமைச்சர் பதவியா? ஜாமீன் வேண்டுமா? என்பதை 28-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
மூத்த அமைச்சரான துரைமுருகன், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து, மீண்டும் விசாரித்து, 6 மாதத்துக்குள் விசாரணைகளை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நீதிமன்ற வழக்குகள் தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த காரணங்களுக்காக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பொன்முடி, செந்தில் பாலாஜி யின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என்று தெரிகிறது.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் இலாகா மாற்றப்பட்டு மருத்துவர் எழிலனுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்ற பேச்சும் அடிபடுகிறது. பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதல் பொறுப்புகள், இலாக்காக்கள் அல்லது துறை மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிகிறது.