நெருங்கி வரும் புயல்.. 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

 
storm

புயல் எச்சரிக்கையை அறிவுறுத்தும் வகையில் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் கடந்த 19-ம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அன்று நள்ளிரவிலேயே தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. பின்னர் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக உருவெடுத்தது. தென்மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு ‘தேஜ்’ என பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு 11.30 மணியளவில் ‘தேஜ்’ அதிதீவிர புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு அரபிக்கடலில், சகோத்ரா (ஏமன்) நகருக்கு 330 கி.மீ. கிழக்கு - தென்கிழக்கேயும், சலாலா (ஓமன்) நகருக்கு 690 கி.மீ. தெற்கு - தென்கிழக்கேயும் மற்றும் அல் கைடா (ஏமன்) நகருக்கு 720 கி.மீ. தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது. இன்று மதியம் புயல் இன்னும் அதிக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் வங்கக்கடல் பகுதியில் அந்தமான் தீவுகளுக்கு மேற்கே நிலவி மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது அந்தமான் தீவுகள் போர்ட் பிளேயருக்கு வட - வடமேற்கில் சுமார் 110 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவிற்கு தென் - தென்கிழக்கே ஆயிரத்து 460 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

Storm

இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது. அப்போது, மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இது நாளை காலை மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளது.

இந்த புயலுக்கு ஹாமூன் என்று பெயரிடப்பட்டு உள்ளது. பின்னர் வடக்கு - வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருகிற 25-ம் தேதி அதிகாலையில் டின்கோனா தீவு மற்றும் சாண்ட்விப் இடையே வங்கதேச கடற்கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மேலும், கடல் காற்றும் பலமாக வீசி வருதிறது. இதை தொடர்ந்து  ஏற்கெனவே மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களைக் கரைக்குத் திரும்புமாறும், புதிதாக மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் கடலோர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடலோர காவல் படையின் ரோந்து கப்பலான ராணி அபாக்கா மூலம் வங்கக் கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் ஒலிபெருக்கி மூலம் புயல் குறித்து எச்சரிக்கை செய்து உடனடியாக கரைக்கு திரும்புமாறு காவல் படையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Rain-Report

இந்நிலையில் புயல் எச்சரிக்கையை அறிவுறுத்தும் வகையில் எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை எண்ணூர் உள்பட கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீனவர்கள் நாளையும் நாளை மறுநாளும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிழக்கு பிராந்திய கடலோரக் காவல் படை மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், உயிரிழப்பைத் தடுப்பதற்கும் தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களின் கடல்பகுதியில் ரோந்து சென்று வருகிறார்கள். மேலும் ஹெலிகாப்டர்களுடன் கூடிய கடலோர காவல் படை கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அரபிக்கடல், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல்களை தொடர்ந்து இன்று முதல் 23-ம் தேதி வரை தென்மேற்கு, தென்கிழக்கு பகுதிகளுக்கும், 26-ம் தேதி வரை மத்திய மேற்கு பகுதிக்கும், 24-ம் தேதி முதல், 26-ம் தேதி வரை வடக்கு பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

From around the web