முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி திடீர் சந்திப்பு.. திமுகவுடன் கூட்டணியா? அரசியலில் பரபரப்பு

 
MKS-Anbumani

முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி , கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, பாமக இணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் சந்தித்தனர். என்.எல்.சி. உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முதல்வருடன் அன்புமணி பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி கூறியதாவது, “வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து முதல்வரை கூட்டாக இன்று சந்தித்தோம். கடந்த ஆண்டு தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மீண்டும் உருவாக்கினர். வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்புக்கு ஏற்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 

Anbumani

அதன்படி பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மூன்று மாதத்தில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பான தரவுகளை சேகரித்து தமிழக அரசுக்கு பரிந்துரையாக  வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது. அதை விரைவுபடுத்தி இந்தக் கல்வியாண்டுக்குள் வன்னியர் உள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்தினோம்.

போதைப் பொருள் தொடர்பாக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி போதைப் பொருள்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மாவட்ட ஆட்சியர் , காவலர்களுடன் மாதாந்திர கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம். 

Anbumani

வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு விழா நிகழ்ச்சி நடத்துவது குறித்து காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். காவல்துறை அனுமதி வழங்கினால் சித்திரை முழு நிலவு விழா நடைபெறும். நாடகக் காதல் தொடர்பாக இப்போது பேச நான் விரும்பவில்லை.

வன்னியர் உட்பட அனைத்து சாதிகளுக்கும் மக்கள் தொகை எண்ணிக்கைக்கும் ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான  இடஒதுக்கீட்டில் எங்களுக்கு உடந்தை கிடையாது. அதில் தாழ்த்தப்பட்டோர் , பிற்படுத்தப்பட்டோர் ஏன் சேர்க்கப்படவில்லை” என்றார்.

From around the web