வயலில் சோளத்தட்டைக்கு தீ வைத்த மூதாட்டி.. தீயில் உடல் கருகி பலி.. அரியலூர் அருகே சோகம்!
செந்துறை அருகே சோளத்தட்டைக்கு தீ வைத்த மூதாட்டி அதே தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்லநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பட்டம்மாள் (75). இவருக்கு சொந்தமான நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்து அறுவடை செய்துள்ளார். பின்னர் வயலில் உள்ள சோளத்தட்டையை தீயிட்டு கொளுத்தி உள்ளார்.
சோளத்தட்டைகள் எரிந்த நிலையில் தீ மளமளவென பரவி பக்கத்து கொல்லையில் உள்ள மக்காச்சோள தட்டைகள் எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்த பட்டம்மாள் வேப்ப மரத்தின் தழை குச்சிகளை உடைத்து தீயை அணைக்க முயன்றுள்ளார்.
அப்போது கருப்பையா கோவிலுக்கும் தீ பரவிய நிலையில், அதனை அணைக்க சென்ற பட்டம்மாள் மீது தீப்பற்றியது. இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பட்டம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சோளத்தட்டைக்கு தீ வைத்த மூதாட்டி அதே தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.