காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி சட்டமன்ற தலைவர்களின் கூட்டம் நாளை காலை நடைபெற உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
காவிரி நதியில் தமிழ்நாட்டிற்கான நீரைத் தராமல் கர்நாடகா அரசு தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 11-ம் தேதி கூடிய காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழு, தமிழ்நாட்டிற்கு தினசரி 1 டிஎம்சி நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு உத்தரவிட்டது. ஆனால் இதனை செயல்படுத்த முடியாது என கர்நாடகா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கர்நாடகாவின் இந்த அறிவிப்பிற்கு தமிழ்நாடு அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதனிடையே கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநில அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உரிய நதிநீர் பகிர்வை வழங்க வேண்டும் என தமிழ்நாட்டின் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடகா அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அளிக்க முடியாது என கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதி ஆணையினையும், சுப்ரீம் கோர்ட்டின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பினையும், செயல்படுத்த, CWMA மற்றும் CWRC ஆகிய அமைப்புகளை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி, 2018-ம் ஆண்டு ஜூன் முதல் இவ்வமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தீர்ப்புகளின்படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரை சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடி நீரைப் பெற்றது.
தற்போதைய தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், “கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழு (CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரினை கணக்கிட்டு 12.07.2024 முதல் 31.07.2024 வரை நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று CWRC அமைப்பு ஆணையிட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த ஆணையை உடனடியாக செயல்படுத்திட தமிழ்நாடு அரசு CWMA அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு CWRC ஆணையின்படி நீரை விடுவிக்காத கர்நாடகத்தின் செயல் சுப்ரீம் கோர்ட்டின் ஆணையை மீறுவதாகும்.
இன்றைய அளவில் (15.07.2024) கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 75.586 டி.எம்.சி. ஆகும். மேலும், IMD யின் அறிக்கையின்படி மழை சரியான அளவில் பெய்ய வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையில் வெறும் 13.808 டிஎம்சி அளவிற்கு மட்டுமே நீர் உள்ளது. இந்தச் சூழலில், வரையறுக்கப்பட்டுள்ள CWRC அமைப்பின் ஆணையின்படி கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.
இவ்வாறு, தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்று கொள்ளாது. காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை நாளை (16.07.2024) காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டிட ஆணையிட்டுள்ளேன். இக்கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.