காவல்துறை ஆணையர் மீது நடவடிக்கை! உச்சநீதிமன்றம் சென்ற தமிழ்நாடு அரசு!!
சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில் காவல்துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்தது. பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. மாணவியின் அடையாளத்தை எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. செய்தியாளர் சந்திப்பு நடத்த அரசிடம் சென்னை காவல் ஆணையர் அனுமதி பெறவில்லை. சென்னை காவல் ஆணையர் அருண் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.