ரூ.10-க்கு ஆவின் பால் பாக்கெட்.. இன்று முதல் விற்பனை தொடக்கம்

 
Aavin

இன்று முதல் ஆவின் டிலைட் 200 மி.லி. பால் பாக்கெட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் சார்பாக நாள்தோறும் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிறுவனம் சார்பில் அதிக கொழுப்பு, நடுத்தர கொழுப்பு, குறைந்த கொழுப்பு என்ற 3 வகைகளில் மக்களுக்கு தேவையான பால் பாக்கெட்டுகள் பல்வேறு வண்ணங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த மே 9-ம் தேதி சென்னையில் விட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட 500 மில்லி ஆவின் டிலைட் பால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஊதா நிற பால் பாக்கெட் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

Aavin

இதைத்தொடர்ந்து, 4.5 சதவீதம் கொழுப்பு சத்து கொண்ட ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தவும், அதற்கு பதிலாக 1 சதவீதம் கொழுப்புச் சத்து குறைவான ஊதா நிற பாக்கெட் விற்பனையை அதிகரிக்க போவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து, ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டில் இருக்கும் கொழுப்பு இன்றைய மக்கள் வாழ்க்கைக்கு ஏற்புடையதாக இல்லை எனவும், வளரும் குழந்தைகளுக்கு ஏற்ப கொழுப்பு சத்துடன் கூடிய ஊதா நிற டிலைட் பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது லாப நோக்கமின்றி மக்கள் சேவைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கமளித்தார்.

Aavin

இந்த சூழலில், ஆவின் 500 மி.லி., டிலைட் பால் ரூ. 21-க்கும் 200 மி.லி., டிலைட் பால் ரூ.10-க்கும் இன்று முதல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 10,000 பால் பாக்கெட் என முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆவின் பாலகங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும் பாலை வாங்கி பொதுமக்கள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரூ.10 ஆவின் பால் பாக்கெட்டை பொதுமக்கள் ஏராளமானோர் வாங்கி செல்வார்கள் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

From around the web