அரிவாள்மனையால் கணவனை வெட்டிக்கொன்ற மனைவி... வாலாஜாபேட்டையில் அதிர்ச்சி சம்பவம்!!

 
Ranipet

வாலாஜாபேட்டை அருகே அரிவாள்மனையால் கணவனை மனைவி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள ஒழுகூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு நந்தினி என்ற மகளும், சரவணன் என்ற மகனும் உள்ளனர். இதில் சரவணன், கல்லூரி பட்டப்படிப்பு படித்து வரும் நிலையில், மகள் நந்தினி திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார்.

murder

கட்டிட தொழிலாளியான ஏழுமலை குடிக்கு அடிமையான நிலையில், நாள்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் குடும்பத்தை நடத்த வழியில்லாமல் கலைச்செல்வி மாந்தாங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் பணிக்கு சென்றுள்ளார். மேலும் மாலை நேரங்களில் கூடுதல் நேரம் பணியாற்றியும் வந்தார். இப்படி பணிக்கு சென்றுவிட்டு காலதாமதாக வரும்போதெல்லாம் மதுபோதையில் இருக்கும் ஏழுமலை தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பிரச்சனை செய்துள்ளார்.

அதேபோல் நேற்று அதிகாலையும் மதுபோதையில்  இருந்த ஏழுமலை கலைச்செல்வியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கலைச்செல்வி வீட்டில் இருந்த அரிவாள்மனையால் ஏழுமலையின் தலையில் சரமாரியாக வெட்டினார். மேலும் சுத்தியலை கொண்டு ஏழுமலையின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Wallajah PS

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார், உயிரிழந்த ஏழுமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து கணவனை வெட்டி கொலை செய்த மனைவி கலைச்செல்வியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    

From around the web