நண்பனுக்காக திருநங்கை அவதாரம்.. 7 ஆண்டு காதலை முறித்த காதலன்.. நீதிகேட்டு போராட்டம்.!!

 
cuddalore

கடலூர் அருகே நெருங்கிப் பழகிய நண்பனுக்காக பெண்ணாக மாறிய இளைஞருக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பாலூர் நடுக் காலணி பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (26). இவரும் நத்தம்பட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞரும் நண்பர்களாக பழகி வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் இடையே நெருக்கம் அதிகரிக்க தன்பாலின ஈர்ப்பாளர்களாக மாறி காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து, அந்த இளைஞன் வினோத்குமாரிடம் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினால் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தைகள் கூறியுள்ளார்.

நெருங்கி பழகிய நண்பனின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிய வினோத்குமார், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறியுள்ளார். மேலும், காதலன் ஆசைக்காக தனது பெயரை வினோதினி எனவும் மாற்றிக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இருவரும் ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

Love

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், வினோதினியுடன் குடும்பம் நடத்த முடியாது என சண்டை போட்டுவிட்டு தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கே சென்றுவிட்டார். மகன் திரும்பி வந்த கையோடு அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய பெற்றோர்கள் தீவிரம் காட்டியுள்ளனர். இதனைத் தெரிந்துகொண்ட வினோதினி, அவர்களது வீட்டிற்கு சென்று சண்டை போட்டுள்ளார். மேலும், அந்த இளைஞரை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி ஊர் பஞ்சாயத்திலும் முறையிட்டுள்ளார்.

இரு தரப்பினரையும் அழைத்து ஊர் பஞ்சாயத்தை சேர்ந்தவர்கள் மத்தியஸ்தம் பேசியுள்ளனர். அப்போது வினோதினியை அந்த இளைஞரின் உறவினர்கள் கடுமையாக தாக்கி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வினோதினி, இளைஞனுக்கு எதிராக புகார் அளிக்க கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அங்கு தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய் கேனை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். 

Police

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனே அங்கு வந்து கேனை பிடுங்க முயற்சித்தனர். இதனால் மண்ணெண்ணெய்யை எடுத்து குடித்த அவரை, போலீசார் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பேட்டியளித்த வினோதினி, “என்னை திருநங்கையாக மாற அறுவைச் சிகிச்சை செய்ய சொன்னதே அவன் தான். அவனை நம்பித்தான் நானும் அறுவை சிகிச்சை செய்தேன். 7 வருடங்களாக இருவரும் ஒற்றுமையாகதான் இருந்தோம். இப்போது அவன் என்னிடம் உன்னைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் வினோ... ஆனா எங்க அம்மா என்ன கல்யாணம் பண்ணச் சொல்றாங்கனு சொல்றான். அதுகுறித்த ஆடியோவும் என்கிட்ட இருக்கு. என்னுடைய வாழ்க்கையே அவனால்தான் வீணாகப் போயிடுச்சி. அவன் கூட மட்டும்தான் வாழ்வேன்” என்று கூறியுள்ளார்.

From around the web