பள்ளி வேன் - கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 5 பேர் பலி.!!

சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இன்று பள்ளி வேனும் காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகின, இதில் கார் முற்றிலும் சிதைந்தது. காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பள்ளி வேனில் இருந்த 5-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு மாவட்ட எஸ்.பி. நேரில் சென்று ஆய்வு செய்தார். விபத்தில் சிக்கிய வாகனங்கள் பொக்லைன் வாகனம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன.
விசாரணையில், ஒப்பனையாள்புரத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது விபத்து நடந்துள்ளது. விபத்தில் இறந்தவர்களின் பெயர் விவரம் உடனடியாக தெரிய வரவில்லை. விபத்துக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், விபத்து தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில் பெட்ரோல் பங்க் அருகே பள்ளி வேன் திரும்பியபோது, எதிரே வேகமாக வந்த கார், வேன் மீது பயங்கரமாக மோதுகிறது. மோதிய வேகத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியதை காண முடிகிறது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.