அரசு பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதல்... ப்ளஸ்-1 மாணவர் பலி.. தேர்வு எழுதிவிட்டு வந்தபோது பரிதாபம்!!

 
Villupuram

மேல்மலையனூர் அருகே அரசு பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ப்ளஸ்-1 மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே மேல்வைலாமூர் கிராமத்தில் வசித்து வருபவர் குப்புசாமி. இவரது மகன் தினேஷ் (16). இவர், அவலூர்பேட்டை அரசு பள்ளியில் ப்ளஸ்-1 படித்து வந்தார். இவர் நேற்று பள்ளியில் ப்ளஸ்-1 தமிழ் தேர்வை எழுதிவிட்டு தன்னுடன் படிக்கும் சக மாணவர்களான மேட்டுவைலாமூரை சேர்ந்த சேட்டு மகன் திருமலை (16), தாழங்குணம் சாமிநாதன் மகன் தினேஷ் (16) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். 

Accident

மோட்டார் சைக்கிளை குப்புசாமி மகன் தினேஷ் ஓட்டினார். மேல்மலையனூர் அடுத்த குந்தலம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் குப்புசாமி மகன் தினேஷ் படுகாயமடைந்தார். மற்ற 2 பேரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய தினேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

Avalurpettai PS

இதுகுறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ப்ளஸ்-1 தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web