அதிவேகமாக வந்த பைக்... சாலையை கடக்க முயன்ற 5 வயது சிறுமி மீது மோதி விபத்து... மருத்துவமனையில் அனுமதி!!

சிதம்பரம் அருகே சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவி மீது இருசக்கர வாகனம் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அம்மாபேட்டை பகுதியில் வசித்து வருபவர் வேலுச்சாமி. இவரது மகள் சாதனா (5). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி படித்து வந்தார். இந்த நிலையில், குழந்தை சாதனா நேற்று மாலை பள்ளி முடிந்து அவரது தாத்தாவுடன் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது சிதம்பரம் - சீர்காழி சாலையில் சாலையை கடக்க முயன்ற சிறுமி மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் குழந்தை சாதனா பலத்த காயமடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் சாதனாவின் இரண்டு கால் எலும்புகளும் முறிவு ஏற்பட்டது. அங்கு குழந்தை சாதனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், குழந்தையின் தந்தை வேலுச்சாமி அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வாகனத்தில் வந்த மர்ம நபர் யார் என சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.