அரசு கல்லூரியில் புகுந்து மாணவர்கள் மீது 50 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்.. நாகையில் பரபரப்பு! அதிர்ச்சி வீடியோ

நாகை அரசு கல்லூரியின் உள்ளே புகுந்து மாணவர்கள் மீது 50 பேர் கொண்ட வெளிபகுதியை சேர்ந்த கும்பல் தாக்குதல் நடத்தும் பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது.
நாகை மாவட்டம் செல்லூர் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மாணவி ஒருவரை கேலி செய்ததாக எம்.காம் மற்றும் பி.காம் மாணவர்களுக்கு இடையே கடந்த சனிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இரண்டு வகுப்பு மாணவர்களையும் அவர்கள் பெற்றோர் முன் கல்லூரி முதல்வர் அவரது அறையில் வைத்துக் கண்டித்துள்ளார். அப்போது பி.காம் மாணவர்களுக்கு ஆதரவாக கல்லூரியில் படிக்காத நாகை செல்லூர் பகுதியை சேர்ந்த டவுசர், லுங்கி அணிந்து கொண்டு வந்த 50 பேர் கொண்ட கும்பல் கல்லூரியின் உள்ளே திடீரென நுழைந்தனர்.
அப்போது ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தியதை பொருட்படுத்தாத அந்த கும்பல் கல்லூரி மாணவர்களை தாக்கத் தொடங்கினர். இந்த தாக்குதலில் 5 மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு இடையே கல்லூரிக்குள் நடந்து வரும் பிரச்சனையை கல்லூரி ஆசிரியர்கள் கண்டித்துக் கொண்டிருக்கும் வேளையில் வெளியில் இருந்து வந்த 50 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.