செப்டிக் தொட்டி கட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்து 4-ம் வகுப்பு மாணவி பலி! போளூர் அருகே சோகம்!!

 
Chetpet

போளூர் அருகே செப்டிக் டேங்கிற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 4-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்துள்ள மோசவாடி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (43). கூலித்தொழிலாளியான இவருக்கு சித்ரா (37) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு சாருலதா (18), சர்மி (9) என 2 மகள்கள் உள்ளனர். இதில், சர்மி கரிப்பூர் யூனியன் நடுநிலைப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். 

Chetpet

இவர்கள் வீடு அமைந்துள்ள பகுதியில், மற்றொருவரின் வீடு கட்டுமானப் பணி நடந்துவருகிறது. அந்த வீட்டுக்கான செப்டிக்டேங்க் அமைப்பதற்காக 10 அடி ஆழம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் சிறுமி அந்த வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, எதிர் பாராதவிதமாக மண் சரிந்ததில், செப்டிக் டேங்க் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்தார்.

சர்மியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்து பார்த்தனர். அதற்குள்ளாக சர்மி மீது மண் சரிந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்பதற்காக பொதுமக்கள் முயன்றனர். ஆனால் சிறுமி மண்ணுக்குள் முழுமையாக புதைந்துவிட்டார். இதுகுறித்து சேத்துப்பட்டு தீயணைப் புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

Dead

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், சரிந்து கிடந்த மண்ணை அப்புறப்படுத்தி சர்மி இறந்த நிலையில் மீட்டனர். பின்னர் இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web